1908ம் ஆண்டு, திபெத்திற்கு (Tibet) 19 வயதுள்ள இளைஞனாய் ஊழியம் செய்ய சென்றார் சாது சுந்தர் சிங் (Sadhu Sundar Singh) அவர்கள். திபெத்தில் புத்த மதமே பிரதானமாக இருந்ததால், அம்மதம் நலிந்து போய்விடக் கூடாது என்பதற்காக பிறமத மிஷனரிகள் திபெத்திற்குள் நுழைய கூடாது என்று கடுமயான சட்டமிருந்தது.
ஆனால் சாது சுந்தர் சிங் அங்குள்ள லாசா பட்டணத்திற்குள் நுழைந்தார். அம்மக்களிடையே சுவிஷேசத்திற்கு வரவேற்பு இருக்வில்லை. அவர்கள் சுந்தரை பிடித்து, அவ்வூர் பிரதம லாமாவிடம் கொண்டு வந்தனர்.
அனுமதியின்றி ஊருக்குள் நுழைந்த குற்றத்திற்காகவும், வேறு மதத்தை பிரசங்கித்த குற்றத்திற்காகவும், லாமா அவருக்கு மரண தண்டனை விதித்தார். திபெத்தில் மரணதண்டனை கொடுக்கும் முறைப்படி, சுந்தர் ஒரு கிணற்றுக்கு அருகில் கொண்டு செல்லப்பட்டார். அவரது உடைகளை உரிந்து விட்டு, எலும்பும், குப்பையும் நிறைந்த இருண்ட கிணற்றிற்குள் தூக்கி எறிந்தார்கள்.
விழுந்த வேகத்தில் வலது கை தோள்பட்டையில் அடிபட்டு மயக்கமுற்றார். மயக்கம் தெளிந்து எழுந்த போது, எங்கும் இருளாகவே இருந்தது. இவருக்கு முன் இந்த கிணற்றில் எறியப்பட்ட பலரது அழுகிய மாம்சமும், எலும்புகளும் எங்கும் நிறைந்து தாங்கமுடியாத துர்நாற்றம் வீசியது. கை வைத்த இடமெல்லாம், அழுகிய மாம்சமும், எலும்புகளுமிருந்தன. தோளில் அடிபட்ட இடம் தாங்க முடியாத வலியை கொடுத்தது.
அப்பொழுது இயேசு இரட்சகர் வேதனையடைந்து உச்சரித்த வார்த்தைகளை தான் அவர் நாவிலும் வந்தன். ”ஏன் என்னை கைவிட்டீர்?” துர்நாற்றம், பசி, தாகம், வேதனை இவைகளின் மத்தியில் சுந்தருக்கு தூக்கம் வரவில்லை. முன்றாம் நாள் இரவில் ஜெபித்து மரணத்தை எதிர்பார்த்திருந்தார்.
திடீரென கிணற்றின் வாயை மூடியிருந்த கதவின் பூட்டை யாரோ திறக்கும் சத்தம் கேட்டது. பேராவலோடு அண்ணார்ந்து பார்த்தார். மேலேயிருந்த மனிதர் ”கீழே விடப்படும் கியிற்றை உன் இடுப்பில் கட்டிக்கொள்” என்றார். அதன்படி செய்தார். மேலே வந்ததும் அவர் சுந்தரை தூக்கி கிணற்றிற்கு வெளியே விட்டார். நல்ல காற்றை சுவாசித்து, கர்த்தருக்கு நன்றி செலுத்தும் வேளையில், மறுபடியும் கதவு மூடப்படும் சத்தம் கேட்டது. தனக்கு உதவிய நண்பருக்கு நன்றி செலுத்தும்படி திரும்பினார், என்ன ஆச்சரியம்! அங்கு யாருமில்லை.
அவருடைய தோள்பட்ட வலியும் மறைந்து போனது. அப்போது தன்னை காப்பாற்றயது கர்த்தர் என அறிந்து தேவனுக்கு நன்றி செலுத்தினார்.
பிரியானவர்களே! நாம் ஆராதிக்கின்ற தேவன் சர்வ வல்லமையுள்ளவர். தம்மை நம்புகிறவர்களுக்கு இயற்கைக்கு அப்பாற்பட்ட அற்புதத்தை செய்து அவர்களை விடுவிக்க வல்லவர். தமக்காக வைராக்கியம் பாராட்டுகிறவர்களுக்காக வைராக்கியம் பாராட்டும் தேவன் நம் தேவன். தேவனுக்காக வைராக்கியம் பாராட்டின தானியேலை காப்பாற்ற சிங்கங்களின் வாயை கட்டிய தேவனல்லவா நம் தேவன்!
அந்த மூன்று எபிரேய வாலிபர்கள் நேபுகாத்நேச்சார் செய்துவைத்த சிலையை வணங்காதபடி வைராக்கியம் பாராட்டியதால் அவர்களை ஏழு மடங்கு எரியும் சூளையில் தூக்கி எறிந்த போது, தேவன் அவர்களுக்காக வைராக்கியம் பாராட்டி, நான்காவது ஆளாக, அவரே இறங்கி வந்து அவர்கள் நடுவில் உலாவி, நெருப்பின் வாசனையும் அவர்கள் மீது வீசாமல், அவர்களை வெளியே கொண்டுவந்த தேவன் அல்லவா நம் தேவன்! ஒட்டுமொத்த நாடும் எலியாவை அரசரின் ஆனை படி கொலை செய்ய தேடியபோது அவரை ஆண்டவர் காகத்தை கொண்டு போசித்து ஏற்ற சமயத்தில் ஒட்டுமொத்த மக்கள் மத்தியிலும் உயர்த்தினார் அல்லவா!
ஆம் நாம் ஆராதிக்கும் தேவன் சர்வ வல்லமையுள்ள தேவன். நமக்காக யுத்தம் செய்கிறவர். ஆம், அவராலே செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுமே இல்லை. அவரை ஆராதிக்கிற நாம் நிச்சயமாக பாக்கியவான்கள் தான்.
0 Comments